ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் கலந்துரையாட எதிர்க்கட்சிக் கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு – திங்கள் சந்திப்புக்கு சஜித், அநுர, சிறீதரனுக்கு ஜனாதிபதி அழைப்பு.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க (தேசிய மக்கள் சக்தி), சிவஞானம் சிறீதரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் கலந்துகொள்ள விரும்பும் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இதில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அண்மையில் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளதோடு, அதற்கு அனைத்துக் கட்சிகளினதும் கூட்டுப் பொறுப்புக்கூறல் அவசியமானது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.