நாட்டைக் கட்டியெழுப்ப மீண்டும் ஐ.தே.கவுடன் இணையுங்கள்! – கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் சஜித் அணியினருக்கு ரணில் அழைப்பு.

நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

குளியாப்பிட்டிய மாநகர சபை மைதானத்தில் இன்று (10) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைக்க விரும்பும் மக்களின் சந்திப்பான இந்தப் பொதுக் கூட்டம் “நிதர்சனம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, இந்த முதலாவது பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் பங்கேற்கும் முதலாவது பொதுக்கூட்டம் இதுவாகும். மைதானத்தில் கூடியிருந்த மக்களால் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, குறுகிய அரசியல் நலன்களை நிறைவேற்றாமல் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இக்கட்டான காலத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்த அரசு செயற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எப்பொழுதும் உண்மையைக் கூறி முன்னோக்கிச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சியால் முடியுமாக இருந்தது தொடர்பில் தாம் பெருமை கொள்கின்றார் என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.