தமிழக மீனவர்களின் படகை மீட்க வந்த படகின் உரிமையாளருக்கும் விளக்கமறியல்!

இலங்கையில் பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகை மீட்க, அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த படகின் உரிமையாளரும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மன்னார் கடற்பரப்புக்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்த வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் மூலம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் படகுகள் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. அந்தப் படகுகளுக்கான விசாரணை நேற்றைய தினத்துக்குத் (20) திகதியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு திகதியிடப்பட்ட இரு படகுகளின் வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற சமயம் படகுகளை மீட்டுச் செல்லும் நோக்கில் உரிமையாளர்கள் இருவரும் சட்டத்தரணிகள் மூலம் மன்னார் நீதிமன்றில் பிரசன்னமாகினர்.

முதல் படகின் வழக்கு முதலில் எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம், மன்றில் பிரசன்னமான படகின் உரிமையாளரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மன்னார் நீதிமன்றம் கட்டளையிட்டது.

இதற்கமைய தமிழகம், இராமநாதபுரம், பாம்பனைச் சேர்ந்த படகு உரிமையாளர் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த அன்ரன் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் இரண்டாவது படகின் உரிமையாளரும் நீதிமன்றத்துக்கு வருகை தந்தபோதும் முதலாம் வழக்கின் உரிமையாளருக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்ட நிலையைக் கருத்திலகொண்டு மற்றைய வழக்கில் மன்றில் முன்னிலையாகாமல் தவிர்த்து, அவர் வெளியேறிவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.