SPBக்கு கொரோனா இல்லை : மருத்துவ அறிக்கை! பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை அவருக்கு கொரோனா இல்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைவியில் கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் கோவிட் நெகடிவ் ஆகிய போதும் அவருக்கு இருந்த, வேறு உடல் நலப்பிரச்சினைகள் காரணமாக இன்று பி.ப. 1.04 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

இது குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை தற்போது அதிகாரபூர்வ தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார் எனும் தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய அவரது மகன் எஸ்.பி. சரண், “எஸ்.பி.பி எல்லோருடைய சொத்து. அவரது பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை எங்களுடைய அப்பா இருப்பார். எனது தந்தை உயிரிழப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் முழுமையாக வெளிவரும்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 1 மணியை கடந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பிறகு வைரஸ் தொற்று நீங்கிய பிறகு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, நுரையீரல் உள்ளிட்ட பிற உறுப்புகளில் உள்ள தொற்று தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இல்லை: பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி

அவரது உடல் எப்போது மருத்துவமனையை விட்டு புறப்படும் என எம்ஜிஎம் மருத்துவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எஸ்.பி.பியின் உடல், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தாமரைபாக்கத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. அது இன்று இரவா, நாளை காலையா என்பதை பிறகு தெரிவிக்கிறோம். அரசு அனுமதி கொடுத்த பிறகு அது முடிவெடுக்கப்படும். கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை இல்லை” என்று தெரிவித்தார்.

மருத்துவமனை அறிக்கை என்ன கூறுகிறது?

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எஸ்.பி.பி. அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், தான் நலமுடன் இருப்பதாகவும் யாரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டாமென்றும் கூறியிருந்தார்.

அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.