யாழ்ப்பாணத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளரைத் தெரிவு செய்யவில்லை – ரணில் பகிரங்க அறிவிப்பு.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐ.தே.க. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாகத் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை” – என்றும் அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜ.தே.கவின் பிரதித் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க அறிவித்திருந்தார். இது தொடர்பில் ஐ.தே.க. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.