இரத்தினபுரியில் தமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை! – பிரேத பரிசோதனையில் உறுதி

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொட – பின்னவலவத்த பிரதேசத்தில் 16 வயதான பாடசாலை மாணவி கடுமையாகத் தாக்கப்பட்டுக் கழுத்து நெரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் தனிமையில் இருந்த குறித்த மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பலாங்கொட வைத்தியசாலையில் சுமார் ஐந்து மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது எனக் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கே.லோஷினி என்ற தமிழ் மாணவியே கடந்த 22ஆம் திகதி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மாணவியின் தாயார் பிற்பகல் வீடு திரும்பியபோது மாணவி படுக்கையின் அருகே சடலமாகக் கிடப்பதைக் கண்டு அயலவர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து பலாங்கொட வைத்தியசாலைக்கு மாணவியின் சடலம் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டது.

உயிரிழந்த மாணவியின் முகத்திலும், கழுத்திலும் காயங்கள் இருந்தன என்று பொலிஸார் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.