ரணிலைக் கைவிட ‘மொட்டு’ தீர்மானம்! – மற்றுமொரு வேட்பாளரைக் களமிறக்க முடிவு.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அல்லர். மற்றுமொரு வேட்பாளரே களமிறக்கப்படுவார். இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு ராஜபக்ஷ குடும்பத்தின் பேச்சாளர் எனக் கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மொட்டுக் கட்சியின் வேட்பாளர் ரணில் அல்லர் என்பது அவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றுமொரு கட்சி, கூட்டணியில்தான் ரணிலுக்கு களமிறங்க வேண்டிவரும்.

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தம்மிக்க பெரேரா இன்னும் உள்ளார். பஸில், நாமல் ஆகியோருடன் அவர் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மொட்டுக் கட்சி விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்காததால், இது பற்றி ஜனாதிபதி ரணிலுக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளுள் பஸில் ராஜபக்ஷவுடனேயே இந்தியாவுக்குக் கௌரவமான உறவு உள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.