நெடுங்கேணியில் மாரடைப்பால் கணவர் மரணம்! இறப்பைத் தாங்க முடியாது மனைவி உயிர்மாய்ப்பு!!

நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேற்படி நபரை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லத் தயாராகியபோது அவரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டுக்குச் சென்றார்.

இதன்போது, நெடுங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கணவர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையிலேயே மரணமடைந்தார்.

அந்தத் தகவல் வீட்டுக்குச் சென்றிருந்த அவரது மனைவிக்குத் தெரியவந்ததையடுத்து, கணவரின் இறப்பைத் தாங்க முடியாது மனைவி தவறான முடிவெடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவத்தில் 18 மற்றும் 15 வயதுடைய இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய இராமச்சந்திரன் ரவீந்திரன் மற்றும் தாயாரான 49 வயதுடைய இராமச்சந்திரன் ஜோதீஸ்வரி ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவார்.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.