13ஐ முழுமையாக அமுல் படுத்துவது யார் ? – மே நாள் விழா உரையில் மனோ…

தமுகூ தலைவர் மனோ கணேசன் கிளிநொச்சி தமிழ்  தேசிய மே நாள் விழாவில் கலந்து கொண்டு பேசும் போது ,

சஜித் பிரேமதாச, என் முன்னிலையில் வடகிழக்கு  சிவில் சமூக பிரதிநிதிகளிடம் 13ஐ முழுமையாக அமுல் செய்வேன் என கூறி அதை தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம் பெற செய்வதாக உறுதி அளித்தார்.

ஏனைய பிரதான சிங்கள வேட்பாளர்கள் ரணில், அனுர ஆகியோரிடம் தமிழர்களுக்கான தீர்வை தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பிரசுரிக்க சொல்லுங்கள்.

ஜனாதிபதி தேர்தலை பொது வாக்கெடுப்பாக  கருதி வடக்கு கிழக்கில் பொது வேட்பாளரை நிறுத்த தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு!

ஆனால் கடைசி நேரத்தில், ஒரு  பெரும்பான்மை வேட்பாளருக்கு 2ம் விருப்பு வாக்கு கொடுக்கலாம் என விக்கினேஸ்வரன் எம்பி சொல்வது, சந்தேகங்களை ஏற்படுத்தி, பொது வேட்பாளர் கோஷத்தை மலினப்படுத்துகிறது.

ஆனால் பொது வேட்பாளர் விஷயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள். அது வேறு தளம். இது வேறு தளம்.

நான் வரலாறு முழுக்க மலையகத்தில் உரிமைக்கு குரல் கொடுத்து, வடகிழக்கில் உறவுக்கு கரம் கொடுத்துள்ளேன். அதனால் கரம் கொடுக்க இன்று கிளிநொச்சி வந்தேன்.

இன்று வடகிழக்கில் பெரும் சவால் இளைய தமிழ் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறுவதாகும். இதனால் தமிழர் ஜனத்தொகை குறைகிறது.

கடந்த காலங்களில் மலையக தமிழர்கள் கிளிநொச்சி, முல்லை, வவுனியா, மாவட்டங்களில் வந்து குடியேறினார்கள். அன்று அவர்கள் இங்கே வராமல் இருந்திருந்தால் இன்று தமிழர் ஜனத்தொகை கணிசமாக குறைந்து இருக்கும் என்பதை எண்ணி பாருங்கள்.

இனிமேல் மலையக தமிழர் இங்கே வந்து குடியேற மாட்டார்கள். அங்கே அவர்களுக்கான கட்டமைப்பை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்படுத்தி வருகிறது. ஆகவே தமிழர் ஜனத்தொகை குறையாமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.

இன்று தமிழரசு கட்சியின் நிலைமையை கண்டு கவலை அடைகிறேன். நீங்கள் இங்கு பலமாக இருந்தால் தான் நாம் அங்கே பலமாக இருப்போம். இதை நான் 20 வருடங்களுக்கு முன் இங்கு வந்து சொன்னேன். 10 வருடங்களுக்கு முன் இங்கு வந்து சொன்னேன். இன்றும் சொல்கிறேன் என்றார் தமுகூ தலைவர் மனோ கணேசன்.

Leave A Reply

Your email address will not be published.