ஜம்மு: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி : குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!

ஜம்மு காஷ்மீரில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் குருஷேத்ராவில் இருந்து ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி பகுதிக்கு பக்தர்கள் ஏராளமானோர் பேருந்தில் சென்றனர். சோகி சோரா பெல்ட்டில் உள்ள டாங்லி மோர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, 150 அடி பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அக்னூர் மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் சொல்ல முடியாத வேதனையை தருவதாகவும், விபத்தில் பலியானவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்திருப்பதோடு, காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.