அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு: வரவேற்கும் தலைவர்கள், அதிகரிக்கும் விமர்சனங்கள்

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992ஆம் ஆண்டில் இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்படுவதாக லக்னௌ நகரில் உள்ள சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பரவலாக வரவேற்பும் விமர்சனமும் காணப்படுகிறது.

இந்த தீர்ப்பு புதன்கிழமை வெளிவந்தவுடனேயே இந்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இது தொடர்பாக அத்வானி பகிர்ந்துள்ள காணொளியில், இந்த தீர்ப்பு முக்கியமானது. இது எங்கள் அனைவருக்கும் சந்தோஷமான தருணம்,” என குறிப்பிட்டுள்ளார்.

“ஜெய் ஶ்ரீராம்” என்று கூறி இந்த தீர்ப்பை அவர் வரவேற்றார்.

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான ராஜ்நாத் சிங், “பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் சதி இல்லை என்று வெளிவந்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். நீதி வெல்லும் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அது தாமதமாக வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் அதிருப்தி
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சூர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசும்போது, தமது கட்சியின் அதிருப்தியை பதிவு செய்தார்.

“உச்ச நீதிமன்றம் கடந் ஆண்டு அளித்த தீர்ப்பில், மசூதி இடிக்கப்பட்ட செயலை தெளிவான சட்டவிரோத செயல் என்று கூறியது. ஆனால், சிபிஐ நீதிமன்றம், அந்த செயலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புடைய கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களை சதியில் தொடர்பில்லாதவர்கள் எனக்கூறி விடுதலை செய்திருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த தேசமும், பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்-ம் இணைந்து நடத்திய ஆணி வேர் போன்ற அரசியல் சதியின் வடிவத்தை பார்த்தது” என்று அவர் கூறினார்.

இந்திய அரசியலமைப்ப மீது ஒவ்வொரு இந்தியரும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், மத்திய அரசும், உத்தர பிரதசே அரசும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று ரந்தீப் சூர்ஜீவாலா தெரிவித்தார்.

“மறக்கப்பட வேண்டிய சம்பவம்”

இந்த தீர்ப்பு குறித்து சிவேசனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளட் கூறுகையில், “அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரை விடுதலை செய்த தீர்ப்பை வரவேற்கிறேன். அந்த சம்பவம் சதியால் விளைந்தது அல்ல, சந்தர்ப்ப சூழலால் நடந்தது என்பதை நீதிமன்றம் கூறியிருக்கிறது. அது மறக்கப்பட வேண்டிய சம்பவம். பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காவிட்டால், அயோத்தியில் நாம் ராம் ஜென்ம பூமி நடந்ததை பார்த்திருக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு தொடர்பாக டிவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “அங்கு மசூதியே இல்லை. புதிய இந்தியாவின் நீதி,” என குறிப்பிட்டுள்ளார்.

-BBC

Leave A Reply

Your email address will not be published.