இந்திய – இலங்கை உறவுகளை வலுவாகத் தொடர மோடி – ரணில் நேரில் மீண்டும் உறுதி!

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தார். அத்துடன் இந்திய – இலங்கை உறவுகளை வலுவாகத் தொடர இரு நாட்டுத் தலைவர்களும் மீண்டும் உறுதியளித்தனர்.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்றுப் பிற்பகல் புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு, சீஷெல்ஸ் உப ஜனாதிபதி, மொரீஷியஸ் பிரதமர் மற்றும் பூட்டான் பிரதமர் உட்பட பிராந்திய அரச தலைவர்கள் பலர் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதுடன் பிராந்திய அரச தலைவர்களில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பிராந்திய தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நரேந்திர மோடிக்கு அடுத்த இருக்கை வழங்கப்பட்டது.

இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய அரச தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசன்னம் குறித்து இந்திய ஊடகங்கள் முக்கிய இடத்தை வழங்கியிருந்ததோடு, புதுடில்லியின் பிரதான சுற்றுவட்டங்களைச் சுற்றி இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஷேனுகா சேனவிரத்ன, அரச தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.