விமலை கட்சியை விட்டு துரத்த பசில் தயார்

20 வது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தற்குள் குழப்பத்தை ஏற்படுத்த விமல் வீரவன்ச தொடர்ந்து செயற்பட்டால் அவரத குழுவினரை அரசாங்கத்தில் இருந்து விரட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ஷ ஆதரவு பிரிவினர் ஆலோசித்து வருகின்றனர்.

2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவர பாடுபட்ட மங்கள சமரவீர பிற்காலத்தில் விரட்டியடிக்கப்பட்ட போன்று விமல் வீரவன்சவை விரட்டியடிக்க பசில் ராஜபக்ஷ ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு.

மங்கள சமரவீர, மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு பெற்று பல திட்டங்கள் தீட்டி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க செயற்பட்ட போதும் பசில் ராஜபக்ஷ அவரை கட்சியில் இருந்து விரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

எனினும் கோட்டாபயவை ஜனாதிபதியாக்க விமல் என்ன செய்தார் என்ற கேள்வி பசில் ஆதரவு அணியிடம் எழுந்துள்ளது. கோட்டாபயவை ஜனாதிபதியாக்கியது தான் என விமல் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அதன் ஊடாக கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் பசில் தரப்பில் கூறுகின்றனர்.

தனது அமைச்சுக்கு மேலும் சில நிறுவனங்களை இணைத்துக் கொண்டு, தமது ஆதரவாளர்களுக்கு பதவிகள் பெற்றுக் கொண்டு, அமைச்சின் செயலாளரை மாற்றிக் கொண்டு காரியத்தை சாதிக்கவே ஊடகங்களில் 20வது திருத்தம் குறித்து விமல் வீரவன்ச விமர்சனங்களை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.

எனினும் பசில் ராஜபக்ஷவுடன் சமாதானம் பேசுவதற்கு வௌ்ளைக் கொடியுடன் ஒரு தரப்பை அனுப்ப விமல் முயற்சிப்பதாகவும் பசில் ராஜபக்ஷ அதனை விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

20வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடும்போது விமல் தரப்பு எதிர்த்து வாக்களித்தாலும் சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனவும் அதன் பின் விமல் அணி இரண்டாக பிரிந்து பசிலுடன் ஒரு அணி இணையும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை பசில் ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.