20ஆவது திருத்த வரைவால் தமிழருக்குப் பாதிப்பில்லை. டக்ளஸ்

20ஆவது திருத்த வரைவால்
தமிழருக்குப் பாதிப்பில்லை

கனேடியத் தூதுவரிடம் கூறினார் டக்ளஸ்.

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை சரியாகக் கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பம் என்பதை நான் நம்புகின்றேன்.”

– இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தைக் குறைப்பதற்கு கனேடிய அரசின் அனுபவத்தையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சுக்கு இன்று வருகை தந்த இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மைக்கினனுடனான கலந்துரையாடலின்போதே கடற்றொழில் அமைச்சரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

“இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்துக்கு மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவை என்ற அடிப்படையில் வீசப்படுகின்றன. ஆனால், கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் குறித்த இழப்பு வீதம் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.

இந்தநிலையிலேயே கனேடியத் தூதுவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனேடியத் தூதுவர், அது தொடர்பாக சாதகமாகப் பரிசீலிப்பதாகத்  தெரிவித்ததுடன் இலங்கையின் சமுத்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து கனேடிய கடல்சார் கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளினால் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

மேலும், இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கனேடியத் தூதுவருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர், தற்போதைய அரசு மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை உருவாக்கி வருவதாகவும், உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசமைப்பில் குறித்த திருத்தச் சட்ட வரைவு உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு ஊடாகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது எனவும், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை சரியாகக் கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பம் என்பதைத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தற்போதைய அரசு தென்னிலங்கை மக்களின் ஆதரவால் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தற்போது முழுநாட்டு மக்களினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நவராத்திரி விழாவைக் கொண்டாடுவதற்கு அண்மையில் அரசால் நிதியுதவி வழங்கப்பட்டுள்மையையும் கனேடியத் தூதுவருக்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.