02. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்
![](https://www.ceylonmirror.net/wp-content/uploads/2020/10/120725183_3683263285025430_4189677799077661633_n-e1602855449969.jpg)
1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகத் தெரிந்த இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்! : வெற்றிச் செல்வன்
பகுதி 02
ஜூலை 83 கலவரத்துக்கு முன் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தமிழ்நாட்டு தொடர்புகள்அதிகரித்திருந்தன.
தஞ்சாவூர் ஓரத நாட்டைச்சேர்ந்த இளவழகன், ராமசாமி, தஞ்சாவூரைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் பத்திரிகையாசிரியர் எழுத்தாளர் மறைமலையான் அவர்களும் இவர்கள் மூலம் தமிழ்நாட்டு அமைச்சர் தஞ்சாவூரைச் சேர்ந்த எஸ் டி சோமசுந்தரம், தமிழ்நாடுசட்ட மேலவை துணைத் தலைவர் சினிமா பாடலாசிரியர் கவிஞர் புலமைப்பித்தன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடர்புகள் மூலம் பலர் அறிமுகமானார்கள்.
நினைவில் நிற்கும் பெயர்கள் பாண்டிச்சேரியைச் சேர்ந்த அபிமன்யு என்கிற அபி, சீசர் ( எமது இயக்க மத்தியகுழு உறுப்பினர்) ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி சேகர் மாஸ்டர் போன்ற பலர் உதவி செய்தார்கள். இதில் இளவழகன் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நாங்கள் வாங்கிய பிரின்டிங் பிரஸ் பாவாணர் அச்சகம் உரிமை அவர் பெயரில் இருந்தது.
அங்கு மேனேஜராக விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஐயர் சம்பளத்துக்காக வேலை செய்தார். ஐயா மறைமலையான்ஆசிரியராக கொண்டு நாங்கள் வெளியிட்ட மக்கள் பாதை மலர்கிறது என்ற மாதப் பத்திரிகை எமது பாவானர் அச்சகத்தில் தான் அச்சிடப்பட்டது.
நான்தான் அப்பத்திரிகையின் பொறுப்பாளராகவும், கிட்டத்தட்ட மாதா மாதம்5000 புத்தகங்கள் வெளிநாட்டுக்கு பார்சல் செய்து அனுப்பும் வேலையும் நான்தான் செய்தேன். மாறன், சங்கிலி கந்தசாமி போன்றவர்கள் சில வேலைகளில் உதவி செய்வார்கள். பின்பு எனது பொறுப்பை மாதவன் அண்ணா ஏற்றார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செய்திப் பரிமாற்றங்கள் எல்லாம் மிக ரகசியமாக பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் தென்மொழி அச்சகத்தின் ஊடாகவே நடக்கும். அடிக்கடி போலீசாரின் அத்துமீறல்களை ஐயா அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் எங்களால் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்கள்.
காவல்துறையினர் தென்மொழி அச்சகத்தை தலைகீழாகப் புரட்டி விட்டு போன பின்பும் ஒரு மணி நேரத்தில் எமது தகவல் பரிமாற்றங்கள் நடக்கும். ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து எழுதுவதால் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் காவல்துறையினரால் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட காலமும் உண்டு.
1982 ஆண்டு கடைசிப் பகுதியில் சென்னை பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி ரூம் நம்பர் 11 நான் சென்றபோதுஇந்த ரூம் சட்டமன்ற உறுப்பினர் இரா ஜனார்த்தன் அவர்களுக்கு உரியது. அக்காலத்தில் அங்குஇலங்கை விடுதலை போராளிகள் தான் தங்கியிருந்தார்கள். அப்போது அங்கு மாணவர் பேரவை ஆரம்பித்தஅவர்களில் ஒருவரான ஜீவா என்றழைக்கப்படும் ஜீவ ராஜா தங்கி இருந்தார். எந்த நேரமும் குடிவெறியில் தான் இருந்தார்.
அங்கு என்னை சந்தித்த தமிழ் மன்னன் திமுகவைச் சேர்ந்தவர், உமா மகேஸ்வரனை சந்திக்க ஏற்பாடு செய்தார் முதலில் என்ன சந்தித்தவர் மாறன். மாறன் என்னை சந்திக்க வந்த நேரத்தில் அங்கு ராகவனும் பிரபாகரனும் வழக்குத் தவணைக்காக வந்து இருந்தார்கள்.
நான் ராகவன் முதலில் அங்குசந்தித்தபோது மானிப்பாய் இந்துக் கல்லூரியில் எனக்கு சீனியர் என்ற முறையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை பார்த்த மாறன் முதலில் என்னை சந்தேகப் பட்டார். தமிழ் மன்னன் தான்விளங்கப்படுத்தினார். ராகவன் இந்த சம்பவத்தை மறந்து இருக்கலாம். மாறன் தூர கூட்டிக்கொண்டு போய் என்னை பிரபாகரனையும் ராகவனின் காட்டி அவர்களோடு பேச வேண்டாம்கவனமாக இருக்கவும். எனக்கூறினார் பிரபாகரனைப் பற்றி குறிப்பிடும்போது பெயர் சொல்லாமல் முட்டை கண்ணன் என கூறுவர். இரண்டு நாட்களின் பின் உமாமகேஸ்வரன் என்னை சந்தித்த போது அவர் வேட்டி கட்டியிருந்தார்.
அவரை முதன் முதலில் சந்தித்த போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவரோடு வேலை செய்த எனது மிகநெருங்கிய உறவினர்கள் பெயரைச் சொன்ன போது சந்தோஷப்பட்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அதற்காக வேலை செய்யும்படியும், அது இவர்களைத் தவிர மற்றவர்கள் தலைமறைவு காலம் ஆகையால் தலைமறைவாக இருக்கும்படியும் மாறன் வந்துஅடிக்கடி சந்திப்பதாகவும் தேவையான பணத்தை மாறனிடம் கொடுப்பதாகவும்கூறிச் சென்றார். மாறன் நான் தங்கியிருந்த மவுண்ட் ரோட் ராமச்சந்திரன் லொட்ஜ் வந்து என்னை சந்தித்து உணவுக்கும் லாஜிக்கும் பணம் கொடுத்து சில ரகசியமான வேலைகளையும் கொடுத்து செல்வார்.
ஒருநாள் உமா மகேஸ்வரனும் மாறனும் வந்து, கழக கடிதத் தலைப்புகளும் பல வெளிநாட்டு முகவரிகளும் கொடுத்து, முன்பு ஒன்றாய் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வேலை செய்த ஜெர்மனி பரமதேவா,, பிரான்ஸ் ஏரம்பு, லண்டன் கிருஷ்ணன் கிருஷ்ணன் ஊடாக சித்தார்த்தன் போன்றவர்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வளர்ச்சி பற்றியும் அவர்களை எமக்கு வேலை செய்யும் படியும் கடிதங்கள் எழுதினோம்.அதன் பின்புதான் வெளிநாட்டுக் கிளைகள் எமக்காக இயங்கத் தொடங்கின.
1983 மார்ச் மாதம் என நினைக்கிறேன், நூற்றுக்கணக்கான இலங்கை அரசுக்கு எதிரான ஆங்கில பிரசுரங்கள் புத்தகங்கள் நான் இருந்த அறையில் ஒளித்து வைத்தார்கள்.
டெல்லியில் பொதுநலவாய நாடுகளின் கூட்டம் நடைபெறப் போவதாகவும் அங்குபோய் எல்லா நாடுகளின் தலைவர்களுக்கும் கிடைக்கும்படி இந்த புத்தகங்களை வெளிநாட்டு தூதரகங்களுக்குகொடுக்கும்படியும்., அங்கு எமது சார்பாக பத்திரிகையாளர் மயிலாப்பூரைச் சேர்ந்த ஹரி என்பவர் ஏற்பாடு செய்யும் பிரஸ்மீட்டில் புத்தகங்களை கொடுக்கும்படியும் அதோடு இலங்கை பிரச்சனை சம்பந்தமாக நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஹரிகு உதவும் படியும் கூறினார்.
தொடரும் ….