நல்லை ஆதீன முதல்வரின் திருவுடல் தீயுடன் சங்கமம்!

பரிபூரணமடைந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் – இரண்டாவது குருமகா சந்நிதானம் – ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு அவர் பரிபூரணமடைந்தார்.

சுவாமிகளின் திருவுடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லை ஆதீனத்துக்குக் கொண்டுவரப்பட்டு பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து மாலை அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு திருவுடல் ஊர்வலமாகச் செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றன.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய பரிபூரணமடைந்த செய்தி சைவ மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பலரும் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.