மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஓரணியில் திரள்வோம் – எதிர்க்கட்சிகளுக்கு சஜித் அழைப்பு.

மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் அந்த ஆணைக்கு மதிப்பளித்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அதற்குரிய தலைமைத்துவத்தை வழங்கத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவர் இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பிலேயே மேற்படி விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இரு பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்ற இந்த அரசு, 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயற்பட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்கள் தேர்தலின் ஊடாக முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலைக் கையாண்டது போலவே இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் ஜே.வி.பி. கையாண்டது. தேர்தலுக்காக மதம் கூட பயன்படுத்தப்பட்டது.
நாட்டு மக்கள் இப்போது பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். எனவே, பொய்களை முறியடித்து, உண்மையான பலம் வாய்ந்த மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் இந்தச் சவாலான பொறுப்புக்குத் தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.” – என்றுள்ளது.