உணவக உரிமையாளர் வாளால் வெட்டிக்கொலை – இரண்டு சந்தேகநபர்கள் கைது.

உணவகம் ஒன்றின் உரிமையாளர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு – எத்துகால பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே மேற்படி இரண்டு சந்தேகநபர்களும் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 23 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாள் வென்னப்புவை – நைனாமடு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.