மரம் முறிந்து விழ்ந்து உயிரிழந்த இருவருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு.

முல்லைத்தீவில் மரம் முறிந்து விழ்ந்து உயிரிழந்த இருவருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 29.08.2020 அன்று கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக சிலாவத்தை பகுதியில் வீதியோரத்தில் நின்ற மரம் முறிந்து விழ்ந்ததில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இருதயபாலன் ஜெம்சிவிஜேந்திரன்(33 வயது) மற்றும் எட்வேட்அரியராசா எமில்டன்(21 வயது) ஆகிய இரண்டு நபர்கள் உயிரிழந்திருந்தனர்.

குறித்த அனர்த்தம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின்(NDRSC) ஊடாக உயிரிழந்த இருவருக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கான மரண நட்டஈட்டு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(29) காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளரின் இ.லிங்கேஸ்வரகுமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சு.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இக் கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.

இக் கொடுப்பனவின் முதற் கட்டமாக இருவருக்கும் தலா 25,000 ரூபா வீதம் மரணவீட்டில் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் மீதி கொடுப்பனவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இவ் அனர்த்தத்தின் போது உயிரிழந்த இருதயபாலன் ஜெம்சிவிஜேந்திரன் அவர்களது மனைவி பிரிந்து வாழ்கின்ற நிலையில் அவருடைய மூன்று பிள்ளைகளும் அவருடைய பெற்றோருடன் (இருதயபாலன் செசிலியம்மா )வாழ்ந்து வருகின்றன நிலையில் குறித்த கொடுப்பினை அவருடைய பிள்ளைகளுக்கு வழங்குமாறு உயிரிழந்தவரின் தாய் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் அவருடைய பிள்ளைகளாகிய ஜெ.பிறைக்ஷா(12 வயது) அவர்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாவும் ஜெ.கணணிகன் (10 வயது) அவர்களுக்கு 56 ஆயிரத்து 250 ரூபாவும் ஜெ. கபிநயன் (06 வயது) அவர்களுக்கு ரூபா 56 ஆயிரத்து 250 ரூபாவும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இச் சம்பவத்தில் உயிரிழந்த எமில்டன் திருமணமாகாத நிலையில் அவருடைய தாயாருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு காசோலையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.