மனநல காப்பகத்தில் இளைஞர் அடித்துக் கொலை: உடலை தோட்டத்தில் புதைத்த கொடூரம்

மனநல காப்பகத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 22 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 3 மாதங்களாக மாதப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன், வருண் காந்த்(22) தங்கியிருந்தார். இந்த இளைஞருக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலித்துள்ளனர்.

இந்நிலையில், காப்பகத்திலிருந்த வருண் காணாமல் போனதாக குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். மேலும், ஆழியார் அணைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற போது வருண் தப்பியோடி விட்டதாக அது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து காப்பக அறங்காவலர் குழு உறுப்பினர் கிரிராம், மேற்பார்வையாளர் நித்தீஸ் மற்றும் பணிப்பெண் ரங்கநாயகி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிக குறும்பு செய்ததாக வருணைக் காப்பக நிர்வாகிகள் சரமாரியாகத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உடலை யாருக்கும் தெரியாமல் காரில் எடுத்துச் சென்று கவிதாவிற்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள மனநல காப்பக உரிமையாளர் கவிதாவை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.