யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி பிரபாவின் பூதவுடலுக்குப் பலரும் அஞ்சலி!

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சர்மாவின் பூதவுடலுக்குப் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் பூதவுடல் இன்று புதன்கிழமை காலை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதன்போது, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

வவுனியா – ஓமந்தை பகுதியில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், யாழ். இந்தியத் துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரபாகரன் சர்மா தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டுக்காகச் சென்று விட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பி யாழ்ப்பாணத்துக்குக் காரில் வந்து கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகினார்.

இந்த விபத்தில் அவரது மனைவி, மகன் மற்றும் மாமனார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.