ஆர்.சி.பி. வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் : கர்நாடக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு ஆர்சிபி வெற்றி பேரணியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவகாரம் தொடர்பான வழக்கில் மாநில அரசு பதில் அளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த 2025 ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ஆம் பேரணி நடத்தினர். மாநில அரசு, கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 33 போ் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதுதொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.

மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் சஷி கிரண் ஷெட்டி, கர்நாடக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜாமீன் கோரிய மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கர்நாடக மாநில அரசு பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்த நிலையில் நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.