சுயேச்சைக் குழு – சைக்கிள் – மான் இணைந்து காரைநகர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பு.

சுயேச்சைக் குழு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து யாழ். காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.

அதற்கமைய காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராகச் சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணன் கோவிந்தராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று காலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணன் கோவிந்தராஜன் முன்மொழியப்பட்டார்.

சபையில் வேறு எந்த முன்மொழிவுகளும் இல்லாத நிலையில் கிருஷ்ணன் கோவிந்தராஜன் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவின் போது தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த ஆண்டிஐயா விஜயராஜா முன்மொழியப்பட்டார்.

சபையில் வேறு எந்த முன்மொழிவுகளும் இல்லாத நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த ஆண்டிஐயா விஜயராஜா உப தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேசே சபையில், சுயேச்சைக் குழு, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தலா இரண்டு உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஓர் உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சுயேச்சைக் குழு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன ஆட்சி அதிகாரத்தை தலா 16 மாதங்கள் பங்கிடுவதற்கான எழுத்து மூல ஒப்பந்தத்தை நேற்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.