வலிகாமம் தெற்கு பிரதேச சபையிலும் தமிழரசு ஆட்சி!
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஷ் தெரிவானார்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பிற்பகல் வலிகாமம் தெற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவநந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

31 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில்
இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 6 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.
இந்நிலையில், இன்றைய தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் தியாகராஜா பிரகாஷ் முன்மொழியப்பட்டார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் கருணைநாதன் அபராசுதன் முன்மொழியப்பட்டார்.

பகிரங்க வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா பிரகாஷ் 14 வாக்குகளையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கருணைநாதன் அபராசுதன் 12 வாக்குகளையும் பெற்றனர். 5 உறுப்பினர்கள் வாக்களிக்காது நடுநிலை வகித்தனர்.
இதன் மூலம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஷ் தெரிவானார்.

உப தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செல்வரத்தினம் உதயகுமாரன் தெரிவானார்.
