யாழில் 956 பேர் சுயதனிமையில் யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு.

யாழில் 956 பேர் சுயதனிமையில்
யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போதுள்ள யாழ். மாவட்ட நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:-

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கின்றது. இந்தநிலையில் மேலும் 6 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது யாழ். மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள்.

யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்திக் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கடந்த 26ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவருக்குத் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அவர் சென்ற இடங்கள் தற்போது முடக்க நிலைக்கு உள்ளாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதேநேரம் அவருடன் தொடர்பு கொண்டவர்களும் இனங்காண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். நகரப் பகுதியில் அவர் சென்று வந்த 4 கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளன. அதேபோல் அவர் சென்ற உணவகம், சிகை அலங்கார நிலையம் போன்றனவும் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் நடமாட்டங்களைக் குறைக்க வேண்டும். தாம் செல்லும் இடங்கள் தொடர்பான விவரங்களை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் அவர்களுடைய வீடுகளிலேயே இரண்டு வாரங்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பிற்பாடு வெளியில் செல்லலாம்.

வெளியே போவது மிக ஆபத்தான விடயம். தற்போது வடக்கில் தொற்று அதிகரிப்பதற்கு வெளிமாவட்டத்திலிருந்து வருவோரின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாக இருக்கலாம். அதேபோல் வெளிமாவட்டத்திலிருந்து யாழ். மாவட்டத்துக்கு வருவோர் கட்டாயமாக அப்பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் செயற்பட வேண்டும். தற்போது கடைகள், வர்த்தக நிலையங்களைப் பொறுத்தவரைக்கும் அவர்களுக்குச் சில அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கின்றோம்.

கூடுமான வரைக்கும் அங்காடி வியாபாரங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வந்து அங்காடி வியாபாரம் செய்பவர்கள் தற்காலிகமாகத் தமது வியாபாரத்தை நிறுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.