தரைவழியாக இன்று யாழ். வருகின்றார் ஐ.நா. ஆணையாளர் – பல்வேறு தரப்பினரையும் அவர் சந்திப்பார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

இதன்போது, அவர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதுடன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களையும் சந்திப்பார் என்று அறியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் 4 நாள்கள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடிய அவர் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வருகின்றார்.

தரைவழியாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அவர், யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவார். அத்துடன், போராட்டக்காரர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்று அறியவருகின்றது.

இதன் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களின் அரச அதிபர்களை ஆளுநர் செயலகத்தில் அவர் சந்தித்துப் பேசவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய தரப்புக்களை இரவு உணவுடன் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்றும் அறியவருகின்றது.

எனினும், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் யாழ்ப்பாணம் வருகைக்கான நிகழ்ச்சி நிரல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதுடன், அவரின் வருகைக்கான முழு ஏற்பாடுகளையும் ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி பணிமனையே மேற்கொண்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இன்றைய தினம் கண்டி, திருகோணமலை பயணத்தை முடித்துக்கொண்டே யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

முன்னதாக, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணி மனிதப் புதைகுழிக்கும் நாட்டில் பயணிக்க விரும்பும் சகல பகுதிகளுக்கும் செல்வதற்கு தாம் எந்தவிதமான தடைகளையும் விதிக்கப்போவதில்லை என்று அநுர அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.