செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் இன்று மனித சங்கிலிப் போராட்டம்.
யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரிய ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
இன்று முற்பகல் 10.10 மணிக்குப் போராட்டம் நடைபெறும் செம்மணி வளைவு அருகே அக வணக்கம், மலர் அஞ்சலி செலுத்தப்படும்.
தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு மனிதப் புதைகுழி கண்டறியப்பட்ட சித்துப்பாத்தி மயானத்தில் இருந்து போராட்டம் ஆரம்பமாகும். அங்கிருந்து, செம்மணி வீதி வழியாக மனித சங்கிலி முறைமையில் ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியின் பணிமனை வரையில் போராட்டம் நடைபெறும். அங்கு போராட்டக்காரர்களால் மனு கையளிக்கப்படும.
இதனிடையே, மனித சங்கிலிப் பேரணி நீளும் வழியில் தியாகி திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படும். இதேபோன்று, தமிழராய்ச்சி படுகொலை நினைவிடம், யாழ். நூலகம், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுச் சதுக்கம் ஆகிய இடங்களிலும் சுடர் ஏற்றப்படும். அதன்பின்னர், அணையா விளக்கு காற்றுடனும் நீருடனும் கலக்கப்படும்.
மேலும், இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு அனைவரின் ஆதரவையும் ஏற்பாட்டுக் குழுவான மக்கள் செயல் குழு கேட்டுள்ளது.
