2500 ஆண்டுகளுக்கு முந்தைய கீழடி தமிழர் முகம் உருவாக்கம்: புதிய பரிணாமத்தில் அகழாய்வு

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகத்தை மண்டை ஓட்டின் அடிப்படையாக வைத்து, பிரித்தானிய பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

கீழடி அகழாய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே, தமிழ்ச் சமூகம், படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற சமூகமாக விளங்கியதை, கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிறுவியது.

மேலும், அங்கு கிடைக்கப்பெற பல்வேறு சான்றுகள் மூலம், 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கீழடியில் நகர நாகரிகம் இருந்ததை உறுதிப்படுத்திய தொல்லியல்துறை அதை புத்தகமாகவும் வெளியிட்டது.

தமிழரின் முகம்
இந்நிலையில், தற்போது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் வாழ்ந்த தமிழரின் முகம் எப்படி இருக்கும் என்பதை பிரித்தானியாவின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியில் கிடைக்கப்பெற்ற மண்டை ஓட்டினை அடிப்படையாக வைத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இந்த படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

முகத்தின் மேற்பகுதி அங்கு கிடைத்த தொன்மங்களில் அடிப்படையிலும், கீழே தாடை போன்ற பகுதிகள் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படங்கள் 80% அறிவியல், 20% கலை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் “அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்பு பகுதிகளிலிருந்து DNA ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பழங்கால தமிழர்களின் வழித்தோன்றல்களை கண்டறிய உதவும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபணு துறைத் தலைவர் பேராசிரியர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.