உ.பி.யில் அதிர்ச்சி: சமோசாவுக்காக வன்கொடுமை வழக்கை மூடிய காவல்துறை – மறு விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

சிறுமி வன்கொடுமை வழக்கில், சமோசாவை லஞ்சமாக பெற்று காவல்துறை வழக்கை முடித்து வைத்தது தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 1, 2019 அன்று 14 வயது சிறுமி பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது, அந்த பகுதியை சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை வயலுக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அங்கு ஆட்கள் வருவதை கண்ட அவர், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி விட்டார்.

வீட்டிற்கு சென்ற சிறுமி, நடந்த விடயங்களை தந்தையிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையத்திற்கு சென்ற போது, FIR பதிவு செய்ய மறுத்ததோடு, சிறுமியின் தந்தையிடம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, போக்சோ(POCSO) பிரிவின் கீழ் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என கூறி, டிசம்பர் 30, 2024 அன்று நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்தது.

நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை காவல்துறை பதிவு செய்யவில்லை எனக்கூறி, சிறுமியின் தந்தை எதிர்மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், குற்றஞ்சாட்டப்பட்ட வீரேஷ் என்பவர் சமோசா கடை நடத்தி வருகிறார். அவரிடம் 6 சமோசாக்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு, காவல்துறை வழக்கை அலட்சியமாக கையாண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுமி சமோசாவை இலவசமாக கேட்டதற்கு, தரமறுத்ததால் சிறுமி பொய்யான புகாரை அளித்துள்ளார் என முதல் தகவல் அறிக்கையில், காவல்துறை பொய்யான தகவலை அளித்துள்ளது.

இதனையடுத்து, காவல்துறையின் இறுதி அறிக்கையை ரத்து செய்த நீதிமன்றம், மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.