செம்மணியில் இன்று மேலும் இரு சிறுவர்களின் என்புத் தொகுதிகள்! – 4 மண்டையோடுகளும் அடையாளம்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது சிறுவரின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் எட்டாம் நாள் அகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது சிறுவரின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் நான்கு மண்டையோடுகளும் இனங்காணப்பட்டுள்ளன. அதில் ஒன்று நேற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவற்றை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 40 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 34 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன .

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான ஞா.ரனித்தா, வி.கே.நிரஞ்சன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.