சி.ஐ.டி. பணிப்பாளராக ஷானி: மொட்டுக் கட்சி போர்க்கொடி!

“அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்ற ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜே.வி.பி. அலுவலகத்தில் ஊடக சந்திப்பை நடத்தி, அக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்ற ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது பாரதூரமான விடயமாகும். இதற்கு முன்னர் எந்தவொரு அரசும் இப்படிச் செயற்பட்டதில்லை.

தமக்குத் தேவையான விதத்தில் சட்டத்தைச் செயற்படுத்தவும், அரசியல் எதிராளிகளைப் பழிவாங்கும் – ஒடுக்கும் நோக்கிலுமே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியாக இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.