குற்றமிழைத்த தரப்பினரே ஷானியைக் கண்டு அச்சம் – மொட்டுக் கட்சிக்கு அமைச்சர் நளிந்த பதிலடி.
“குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள தரப்பினருக்கே சி.ஐ.டியின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளமை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய ஷானி அபேசேகர சி.ஐ.டி. பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என மொட்டுக் கட்சி தரப்பில் முன்வைக்கப்படும் கருத்துத் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரே ஷானி அபேசேகரவின் விசாரணை நடவடிக்கைகளை முடக்கி, அவரின் தொழிற்சார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தனர்.
ஷானி அபேசேகர திறமையான அதிகாரி. எனவே, ஷானி அபேசேகர யார் என்பது மக்களுக்குத் தெரியும். நாட்டுக்காக உயிரைக்கூடத் துச்சம் எனக் கருதி செயற்படும் அதிகாரியை நாம் பாதுகாப்போம்.
குற்றச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது தமக்குப் பிரச்சினை வரும் எனக் கருதும் தரப்பினரே இப்படியான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.” – என்றார்.
