இலங்கையின் தேசியப் பாதுகாப்பு புலிகளின் காலத்தைவிட மிக மோசம் – மொட்டுக் கட்சி கூறுகின்றது

இலங்கையின் தேசியப் பாதுகாப்பு விடுதலைப்புலிகளின் காலத்தை விடவும் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். .

தேசியப் பாதுகாப்பு தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் தேசியப் பாதுகாப்பு தற்போது வரலாறு காணாத அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்குள் வைத்து துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறுகின்றன. பொலிஸார் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகின்றது. வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஆனால், ‘ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்களே உயிரிழக்கின்றனர்’ எனக் கூறி இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசு முற்படுகின்றது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே மக்கள் அரசைத் தெரிவு செய்கின்றனர். எனவே, கொலை செய்யப்படுபவர்கள் யாரென்பது முக்கியம் அல்ல. எதற்காக இவ்வாறு படுகொலைகள் இடம்பெறுகின்றன என்பதே பிரதானமான விடயம்.

எதிர்க் கருத்துக்கள் உடையவர்களைக் கட்டுப்படுத்த முடியாதபோது, அவர்களைப் படுகொலை செய்துவிடும் ஆட்சியைப் பாசிசவாத ஆட்சியென்றே அழைப்பார்கள். ஆதலால், இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் ஆட்சி தொடர்பில் எமக்குப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், விடுதலைப்புலிகளின் காலத்தில்கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை.” – என்றார்.
………………..

Leave A Reply

Your email address will not be published.