டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் படுகொலை – தந்தை கைது, அதிர்ச்சி வாக்குமூலம்

டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்ற தந்தை அதற்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கனையை கொன்ற தந்தை
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ்(25), மாநில அளவில் விளையாடி பல்வேறு பதக்கங்களை வென்றிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அவர் தனது வீட்டில் இருக்கும் போது, தந்தை தீபக் யாதவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த தீபக் யாதவ், தனது துப்பாக்கியை எடுத்து ராதிகாவை நோக்கி 5 முறை சுட்டார். இதில் 3 குண்டுகள் ராதிகா மீது பாய்ந்தது.

கீழ் தளத்தில் இருந்த அவரது சகோதரர் தீபக், சத்தம் கேட்டு மேலே வந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ராதிகாவை மருத்துவமண்னைக்கு கொண்டு சென்றார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ராதிகா உயிரிழந்தார்.

தகவலறிந்த காவல்துறையினர், தீபக் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தை வாக்குமூலம்
தீபக் யாதவ் அளித்த வாக்குமூலத்தில், தனது மகளின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருவதாக சமூகத்தால் கேலி செய்யப்பட்டதாகவும், இதனால் கடந்த 15 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ராதிகா டென்னிஸ் அகாடமி நடத்தி வருவது தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை மூடுமாறு கோரியுள்ளார். ஆனால் ராதிகா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுட்டுகொன்றுள்ளார்.

மேலும், ராதிகா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவது பிடிக்காமல் அதையும் நிறுத்துமாறு கூறியுள்ளார். ராதிகாவின் தாயார் மஞ்சு யாதவ், தனக்கு காய்ச்சல் இருப்பதால், தான் எதையும் பார்க்கவில்லை என வாக்குமூலம் மறுத்துவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.