திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில் 500 மாணவர்கள்!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை திருவிழாவில் ஒரே தடவையில் 500 மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமாரின் ஒழுங்கமைப்பில் சங்கீத ஆசிரியர்களின் பெரும் ஏற்பாட்டில் இந்த ஐந்நூறு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமியின் மனம் குளிர அவர்கள் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாராயணம் செய்து வரலாற்றுச் சாதனை புரிந்தார்கள். ஆலயக் குருவும் அருளுரை வழங்கினார்.
தினமும் அங்கு பகல் இரவு திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் 24 ஆம் தேதி வியாழக்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறும் என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.








