ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார்? சஹ்ரான், நௌபர் மௌலவியே என்கிறார் வீரசேகர.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் எனில் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளார் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“சஹ்ரான் மற்றும் நௌபர் மௌலவி ஆகியோரே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள். இவர்களில் சஹ்ரான் இறந்துவிட்டார். எப்.பி.ஐ., இன்டர்போல் ஆகியவற்றுக்குக் கூட கண்டுபிடிக்க முடியாமல்போன பிரதான சூத்திரதாரி ஒருவர் இருந்தால், அவர் பற்றி தகவல் வெளியிடாமல் இருப்பது ஏன்? இது பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களை அவமதிக்கும் செயல் என்றே நான் கருதுகின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின்போது ஷானி அபேசேகர சேவையில் இருந்தார். தற்போது அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, எப்படியான பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்கின்றார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். அவ்வாறு பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல்போனால், தம்மால் போலியான கருத்தே சமூகமயப்படுத்தப்பட்டது என்பதை மக்கள் முன்னிலையில் அரசு தெரிவிக்க வேண்டும்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் பிள்ளையானுக்கு த் தொடர்பு இல்லை என்றே கூறப்படுகின்றது. சிலவேளை அவருக்குத் தெரிந்திருந்தால் அது பற்றி விசாரணை செய்யலாம். முழு அதிகாரமும் தற்போது அரசு வசம் உள்ளது. அவ்வாறு விசாரணை செய்து அனைத்து தகவல்களும் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.