கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் தாயகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு.

இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவுருவப் படத்துக்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.