சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் கொலை! – யாழ்ப்பாணத்தில் பரபரப்பு.
யாழ்ப்பாணத்தில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வைரமுத்து சாந்தலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மேற்படி நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில்,
“நான் குறி சொல்லும் வேலை செய்து வருகின்றேன். இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்குத் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்ற வேளை அவர்கள் உள்ளே வந்து என்னைக் கட்டிப் போட்டு விட்டு நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்த வேளை தம்பி சடலமாகக் காணப்பட்டார்.” – என்று கூறியுள்ளார்.
இருப்பினும் மேற்படி பெண் வழங்கிய வாக்குமூலத்தில் திருப்தியடையாத பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
