நல்லூருக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனம்.
யாழ். நல்லூர் ஆலய வீதித் தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
ஆலய மகோற்சவ திருவிழாக்களை முன்னிட்டு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வரையில் நல்லூர் ஆலயச் சுற்று வீதிகள் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு மாற்று வீதிகள் ஊடாகவே வாகனங்கள் செல்லப் பணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடியேற்றத் திருவிழா நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆலயச் சுற்று வீதிகளில் உள்ள வீதித் தடைகளைத் தாண்டி இராணுவத்தினர் கப் ரக வாகனத்தில் ஆலய முன் வீதி வரையில் பிரவேசித்தனர்.
வீதித் தடைகளில் பொலிஸார், யாழ் . மாநகர சபை உத்தியோகத்தர்கள், தனியார் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கடமையில் இருக்கும் போது, அவர்களின் அறிவுறுத்தல்களையும் மீறி இராணுவத்தினர் அடாத்தாக ஆலய வீதிக்குள் உட்பிரவேசித்தமை ஆலயத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கிடையில் கடும் விசனத்தை ஏற்படுத்தியது.
