செம்மணி மனிதப் புதைகுழி தமிழினப் படுகொலைக்கு ஆதாரபூர்வமான சாட்சி!
தமிழினப் படுகொலையை ஆதாரபூர்வமாக எண்பிப்பதற்கான சாட்சியமாக வெளிப்பட்டிருக்கும் யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு மிகவும் அவசியமானது என்பதுடன், ஸ்கானிங் இயந்திரம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியோடு அந்தப் பகுதியில் முழுமையான அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், இன்று அங்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
:1995 ஆம் ஆண்டிலில் இருந்து 2001 ஆம் ஆண்டு வரையும் முழுக்க முழுக்க இராணுவ முகாமாகவும், இராணுவக் கட்டுப்பாட்டு வலயமாகவும் கையகப்படுத்தப்பட்டிருந்த செம்மணிப் பகுதியில் அடையாளம் காணப்படும் மனித என்புத் தொகுதிகள் சாதாரணமாக புதைக்கப்பட்டவைதான் என்று கூற முற்படுவது மிக அபத்தமானது.

இந்துக்களின் சடங்குமுறையில் உடலங்களைக் கூட்டாக அடக்கம் செய்வதோ, ஆடைகளற்று அடக்கம் செய்வதோ பின்பற்றப்படுவதில்லை. அவ்வாறிருக்க ஓர் இனத்தின் பல தசாப்தகாலப் போராட்டத்துக்கான சாட்சியமாக அணுகத்தக்க முக்கியத்துவம் மிக்க விடயமொன்றை மடைமாற்றும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுகின்றார்கள்.
அத்தகைய அரச ஒத்தோடிகளின் செயற்பாடுகளைக் கடந்து, செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் முழுமையாக நடைபெற்று உண்மைகள் கண்டறியப்படுவதற்காக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கவனத்தைக் கோரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வோம்.” – என்றார்.
