உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 44 பேரை விமானம் மூலம் மீட்ட இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையினர்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் தராலி கிராமத்தில் நடந்து வரும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையினர் நிலச்சரிவில் சிக்கிய 44 பேரை விமானம் மூலம் பத்திரமாக மீட்டுள்ளதாக உத்தரகண்ட் அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

உத்தரகாசி மாவட்டம் தராலி பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம், இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை, தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா், உத்தரகாண்ட் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் என நூற்றுக்கும் மேற்பட்டோா் மேற்கொண்டு வருகின்றனா். எனினும், தொடா் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக உள்ளன.

சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் படையினா் தராலி கிராமத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வானிலை சீரடைந்தவுடன், ராணுவத்தின் ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியினரின் தொடா் முயற்சியில் இதுவரை 150 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.

மாட்லியில் உள்ள சுகாதார முகாமில் இருந்து இரண்டு பேர் தீவிர சிகிச்சைக்காக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

44 பேர் மீட்பு

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கிய 44 பேரை இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையினர் விமானம் மூலம் பத்திரமாக மீட்டுள்ளதாக உத்தரகண்ட் அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தராலியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்குள் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும்.

உத்தரகாசியில் இருந்து ஹர்சில் வரையிலான சாலை பெருமளவில் சேதமடைந்துள்ளதால் அதை மீண்டும் சீரமைப்பதில் சிறிது காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஹெலிகாப்டா் மூலம் வெள்ளம் பாதித்த தராலி மற்றும் ஹா்சில் பகுதிகளை பாா்வையிட்ட முதல்வா் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாசியில் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.