அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிப்பு.

நெடுங்காலமாகச் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை அராலி முத்தமிழ் சனசமூக நிலையத்தில் விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்றது.

இந்த விடுதலை நீர் சேகரிப்பதற்கு முன்னர் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் அராலிப் பகுதி மக்கள், சிறுவர்கள் ஆகியோர் தமது வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட விடுதலை நீரைப் பானையில் ஊற்றினார்.

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய இந்த வேலைத்திட்டத்தில் அந்த அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், சிறகுகள் அமைப்பினர், முத்தமிழ் சனசமூக நிலையத்தினர், அராலி பகுதி மக்கள் மற்றும் சிறார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் செயற்றிட்டமானது வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை விரும்பும் புலம்பெயர் தேசங்களிலும் இந்த விடுதலை நீர் சேகரிக்கப்படவுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்படும் நீர் விடுதலை மரம் ஒன்றை நாட்டி வைத்து அந்த மரத்துக்கு ஊற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.