முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் படுகொலையின் மறைகரங்கள் உடனே வெளிக்கொணரப்பட வேண்டும் – காதர் மஸ்தான் எம்.பி. வலியுறுத்து.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்துஐயன்கட்டு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவருமான கே.காதர் மஸ்தான் விடுத்துள்ள ஊடகக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“யுத்தம் முடிவடைந்த பின்னரும் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற இவ்வாறான நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தப் படுபாதக சம்பவங்கள் காரணமாக அந்தப் பகுதி மக்கள் ஐயமும் பீதியும் அடைந்துள்ளனர்.
ஆகவே, மக்கள் பெரும் நம்பிக்கையில் வாக்களித்து ஆட்சிப்பீடம் ஏறி உள்ள இந்த அரசு இந்த நிலைமைகளைக் கருத்தில்கொண்டு விரைவாகச் செயற்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.
