கண் கலங்க வைக்கும் சம்பவம்: விபத்தில் உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் வைத்து கொண்டு சென்ற கணவர்

விபத்தில் கொல்லப்பட்ட தன் மனைவியின் உடலை, தன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் கட்டிவைத்து கொண்டு செல்லும் ஒரு கணவனைக் காட்டும் வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

விபத்தில் கொல்லப்பட்ட பெண்
சனிக்கிழமையன்று இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், தன் மனைவியான கியார்சியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் அமித் யாதவ்.

அப்போது, பின்னால் வந்த ட்ரக் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோத, கியார்சி கிழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த கியார்சி மீது அந்த ட்ரக் ஏறிச் செல்ல அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த வழியாக வந்த பலரிடம் அமித் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வராததால், தன் மனைவியின் உடலை தன் மோட்டார் சைக்கிளின் பின்னால் வைத்துக் கட்டி வீட்டுக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளார் அமித்.

அவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது, அவ்வழியே ரோந்து வந்த பொலிசார் வாகனத்தை நிறுத்தி, நடந்ததை அறிந்து கியார்சியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

அமித் தன் மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளின் பின்னால் கட்டிவைத்துக் கொண்டு செல்லும் காட்சியைக் காட்டும், பொலிசார் எடுத்ததாக கூறப்படும் வீடியோ, இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமித்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதி மரணத்தை ஏற்படுத்திய ட்ரக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொலிசார், இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.