திங்கள் ‘ஹர்த்தால்’ போராட்டத்துக்கு திருக்கோவில் பிரதேச சபை பேராதரவு.
வரும் திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியால் வடக்கு, கிழக்கில் அறிவிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிக்குமார் தலைமையிலான சுயேச்சைக் குழு முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.
அத்துடன் திருக்கோவில் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் இந்தக் ஹர்த்தாலுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் தவிசாளர் சு.சசிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்தையும், முல்லைத்தீவில் உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோருவதையும், செம்மணி போன்ற இனப்படுகொலை சம்பவங்களுக்கு நீதி நிறைவேற்றப்பட வேண்டியதையும் கருத்தில்கொண்டு அனைவரும் இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இது கட்சி சார்ந்த ஒன்றல்ல, இனத்தின் நலனைக் கருதிய நடவடிக்கை என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
