யாழ். உடுவில் – சங்குவேலியில் 9 வயதுச் சிறுமிக்குக் கொரோனா உறுதி!

யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 வயதுச் சிறுமிக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த சிறுமி உடுவில் – சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மகள்கள் இருவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.

அவர்களில் 9 வயதுச் சிறுமிக்கே கொரோனாத் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில், அம்பலவாணர் வீதி – உதயசூரியன் சந்தியில் கொழும்பிலிருந்து வந்த தாய் மற்றும் 10 வயது மகளுக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.