ரணிலை உடனே விடுதலை செய்க! – எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்து.
“இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. தயவு செய்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.”
இவ்வாறு நோர்வேயின் இலங்கையின் சமாதானத்துக்கான முன்னாள் விசேட தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:-
“இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைகின்றேன். தயவு செய்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
விளக்கமறியலின்போது ரணிலின் உடல் நிலை குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகின்றோம்.
2022ஆம் ஆண்டில் நாடு பொருளாதார – அரசியல் குழப்பம் அடைந்த போது இலங்கையைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தகுதியற்றவை. அவை உண்மையாக இருந்தாலும் ஐரோப்பாவில் அவற்றைக் குற்றமாகவோ அல்லது
ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையையும் கொண்டிருக்காது.
ஊழலுக்கு எதிரான இலங்கை அரசின் பிரசாரத்துக்கு நான் முழு ஆதரவை வழங்குகின்றேன். ஆனால், தயவு செய்து உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்.” – என்றுள்ளது.
