ரணிலின் கைது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவால்! – கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தனிப்பட்ட சம்பவம் அல்ல. அது மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட மிகவும் வலுவான சவாலாகும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரணில் விக்கிரமசிங்கவின் கைது ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட மிகவும் வலுவான சவாலாகும். இந்தச் சவாலை எதிர்கொள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானது.

இதன் பொருட்டு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளுடனும் குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே இந்தக் கலந்துரையாடல் கூட்டப்படுகின்றது.” – என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
“இந்தத் தருணத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கான பதில்களைத் தேட வேண்டும். முதலாவது ரணில் விக்கிரமசிங்கவை விடுவிப்பதற்கான வேலைத்திட்டமாகும். இரண்டாவது நாட்டின் ஜனநாயக ரீதியிலான அரசியலுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வதாகும்.
இதன் நிமித்தம், சகல அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.
இதற்காக வேண்டி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்று இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற சகல அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு நடவடிக்கை போலவே அரசின் சகல ஜனநாயக விரோத வேலைத்திட்டங்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
இதன் எதிர்காலப் பணிகளுக்காகக் கட்சிச் செயலாளர்களின் பங்கேற்புடன் ஒரு செயற்பாட்டுக் குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேற்று கூடிய சகல கட்சித் தலைவர்களும் நாளை புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மீண்டும் கூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
