ஜெனிவா பறந்தார் விஜித ஹேரத்
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணியளவில் ஜெனிவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசின் சார்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜெனிவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் விஜித ஹேரத் இரு தரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்கும் விஜித ஹேரத்துக்கும் இடையில் விசேட சந்திப்பும் நடைபெறவுள்ளது.
வோல்கர் டர்க், இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் – தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்த பின்னர் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக புதிய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைக்க முடியும்.
