பாணந்துறை நிலங்கவின் சகாவுக்கு ஏழு நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவல்.

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட பாணந்துறை நிலங்கவின் சகாவை 7 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க பாணந்துறை பிரதான நீதிவான் சம்பிக்க ராஜபக்ஷ, களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளார்.

எம்பிலிப்பிட்டி சுரங்க என்று அழைக்கப்படும் அமித் குமார என்பவரே இவ்வாறு 7 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை நிலங்கவின் சகாவான எம்பிலிப்பிட்டி சுரங்க பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவர் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே, கொமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலகக் கும்பல் கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுவினர் கடந்த மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்துப் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.